படுகொலை செய்த பயங்கரவாதிகள் மதத்தை கேட்கவில்லை; கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேட்டியால் கொந்தளிப்பு

49


பெங்களூரு: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை கொல்வதற்கு முன்னர், பயங்கரவாதிகள் அவர்களின் மதத்தை கேட்கவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரின்பஹல்காமில் கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். கொல்வதற்கு முன்னர், சுற்றுலா பயணிகளின் மதத்தை கேட்டதாகவும், ஹிந்து எனக் கூறியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கு நாடு முழுவதும் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி ஒன்றில், ' நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்', எனக்கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் சுங்கத்துறை அமைச்சர் ஆர்பி திம்மாப்பூர் நிருபர்களிடம் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடத்துபவர், மதம் அல்லது ஜாதியை கேட்டுக் கொண்டிருப்பாரா? அவன் சுட்டுவிட்டு சென்று கொண்டிருப்பான். நடைமுறையில் சிந்திக்க வேண்டும். அவன் நின்று விசாரித்த பிறகு சுட மாட்டான். இந்த கொடூரமான தாக்குதல் நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். பயங்கரவாத தாக்குதலை நடத்தும் போது, பயங்கரவாதிகள் மதத்தை கேட்டிருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். அப்படி கேட்டு இருந்தால், இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சிஆர் ராகவன் கூறியதாவது: அமைச்சர் திம்மாப்பூரின் கொடூரமான மற்றும் மோசமான கருத்து சோகத்தில் இருக்கும் குடும்பங்களின் நேர்மையை அவமதிப்பது போல் உள்ளது. மேலும், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்தவர்களை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த துக்கமான நேரத்திலும் கூட தனது திருப்திபடுத்தும் அரசியலுக்கு தனது ஆன்மாவையும், மனசாட்சியையும் அடகு வைத்த மதவாத காங்கிரஸ் கட்சி வியாபாரம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement