நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகள்

பஹல்காம்: பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர்.
வெறிச்சோடியது
காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பைசரன் பள்ளத்தாக்கு பகுதி. இது சுற்றுலா பயணிகளால் விரும்பப்படும் பகுதியாக அமைந்துள்ளது. ' மினி சுவிட்சர்லாந்து' என சுற்றுலா பயணிகளால் அழைக்கப்படும் பகுதிக்கு அமைதியை தேடி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்கின்றனர். சுற்றுலாவை நம்பியே அப்பகுதியின் பொருளாதாரம் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் கோடை வாட்டிவதைக்கும் நிலையில், சுற்றுலாவின் முக்கியமான காலகட்டமாக தற்போது உள்ளது.
இச்சூழ்நிலையில், கடந்த22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கினர். இதனால், தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நிறைந்து காணப்பட்ட இப்பகுதி தற்போது வெறிச்சோடி காணப்பட்டது. தாக்குதலை தொடர்ந்து பைசரன் பகுதியில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மெதுவாக
இந்நிலையில், பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் தற்போது வர துவங்கி உள்ளனர். தற்போது தினமும் 50 முதல் 100 பேர் வரை சுற்றுலா வருவது தெரியவந்துள்ளது. இதனால், பஹல்காம் பகுதி மெதுவாக இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகிறது. இன்று பஹல்காம் பகுதிக்கு குரோஷியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், உள்நாட்டை சேர்ந்தவர்களும் வந்து இயற்கை அழகை ரசித்து பார்த்தனர்.
பாதுகாப்பு
இது தொடர்பாக குரோஷியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது: இந்த பகுதியில் 4 நாட்கள் தங்க உள்ளோம். இங்கு பாதுகாப்பாக உணர்கிறோம். இந்நாடு அழகானது. இங்கு தங்கி உள்ளதில் எந்த பிரச்னையும் இல்லை. காஷ்மீர் மிகவும் அழகானது. இந்த பகுதி மிகவும் அழகானது. மக்கள் அன்பானவர்களாக உள்ளனர். இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி. சுற்றுலாவாக 12 பேர் இங்கு வந்துள்ளோம். இங்கு நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து நேற்று முன்தினம் கேட்டறிந்தோம். இதன் பிறகு காஷ்மீர் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இங்கு எந்த பிரச்னையும் இல்லை. பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். தாக்குதல் மிகவும் கொடூரமானது என தெரிவித்தார்.
மென்மையானவர்கள்
மற்றொரு சுற்றுலா பயணி கூறியதாவது: 10வதுமுறையாக காஷ்மீர் வருகிறேன். ஒவ்வொரு முறையும் இங்கு சுற்றுலா வருவது சிறப்பாக அமையும். என்னை பொறுத்த வரை இந்த பகுதி உலகின் முதன்மையானதாக இருக்கும். மக்கள் மென்மையானவர்கள். எங்களது குழுவினர் மகிழ்ச்சி. இங்கு பாதுகாப்பாக இருப்பது போல் உணர்கிறோம். எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் எங்களை வரவேற்கின்றனர் என்றார்.செர்பியாவை சேர்ந்தவர்களும் அதே போன்ற கருத்தை தெரிவித்தனர்.
பயமில்லை
குஜராத்தை சேர்ந்த முகமது அனஸ் கூறுகையில், காஷ்மீரில் எங்களது பயணத்தை ரசிக்கிறோம். தற்போது, நாங்கள் பஹல்காமில் இருக்கிறோம். சக சுற்றுலா பயணிகள் இறந்தது கவலை அளிக்கிறது. பஹல்காமில் வணிக வளாகங்கள் திறந்தே உள்ளன. பயப்படும்படி ஏதும் இல்லை. ராணுவ வீரர்கள் இங்கு உள்ளனர். அரசும் எங்களுடன் உள்ளது. உள்ளூர் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். இங்கு வந்தது முதல் எந்த பயத்தையும் நாங்கள் உணரவில்லை.
இங்கு வர கிளம்பிய போது தாக்குதல் அறிந்து பயந்தோம். திரும்பி விடலாம் என நினைத்தோம். ஆனால், உள்ளூர் மக்களும், ராணுவமும் எங்களை தைரியப்படுத்தினர். எந்த பிரச்னையும் இருக்காது என நம்பிக்கை கொடுத்தனர். பஹல்காம் வந்து ரசிக்கும்படி உற்சாகப்படுத்தினர். 22ம் தேதி நடந்தது போன்ற தாக்குதல் மீண்டும் எப்போதும் நடக்கக்கூடாது என்றார்.
உள்ளூர் மக்கள் போராட்டம்
இதனிடையே, காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பஹல்காமில் உள்ளூர் மக்கள் தேசியக் கொடியை பிடித்தபடி பேரணியாக சென்றனர்.





மேலும்
-
விமானத்தில் குண்டு மிரட்டல்; கனடா நாட்டு பயணி கைது
-
பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்புக்கு வேண்டும் 'டிஜிட்டல்' மீட்டர்
-
உக்ரைன் மீது 149 ட்ரோன்களை வீசி திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா; பேச்சை மீறியதால் டிரம்ப் அதிருப்தி
-
'ஆண்டுதோறும் 14.50 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது'
-
புதிய பஸ்கள் துவக்கம்
-
உத்தவ் - ராஜ் கைகோர்ப்பு முடிவு: எளிதல்ல என்கின்றனர் கட்சியினர்