'பட்டாசு விபத்து பாதுகாப்பு; உயிரில்லாத அரசாணை'

சென்னை: 'பட்டாசு தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்கு உரியது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டு, அங்கு ஆய்வுகளின் கால அளவு ஆறு மாதம் என, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனினும் சரியாக ஆய்வு செய்யாததால், பட்டாசு ஆலைகளில், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த எம்.புதுப்பட்டியில், நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில், மூன்று பெண்கள் இறந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் அபாயகரமான பொருட்களை பாதுகாப்பாக சேமித்தல் மற்றும் கையாள, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, பட்டாசு தயாரிப்பின்போது, கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சிவகாசியில் பாதுகாப்பு பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

இதில், 458 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். ரசாயனம் கலத்தல் மற்றும் நிரப்புதல் பணியில், கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, 843 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நடைமுறையில் இல்லை என்பதுதான் உண்மை. அனைத்தும் காகித வடிவில்தான் உள்ளன. கடுமையான பணியாளர் பற்றாக்குறையும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு, சமீபத்தில் எம்.புதுப்பட்டியில் நடந்த வெடிவிபத்தே சாட்சி. தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்கு உரியது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement