குளம் வெட்டிய ஆயிக்கு மண்டபம்

ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி அரசின் சின்னமாகும். இது புதுச்சேரி சட்டசபை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது.

கிரேக்க - ரோமானிய கட்டிடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற தாசி, குளம் வெட்டி குடிநீர் பஞ்சம் தீர்த்த மக்கள் தொண்டின் நினைவைப் போற்றும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது. கிருஷ்ணதேவராயர் தமது ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரியை பார்க்க வரும்போது முத்தரையர்பாளையத்தில் இருந்த ஒரு கோயில் போன்ற மாளிகையைக் கண்டு வணங்குகிறார்.

அது தாசி ஆயியின் இல்லம்.

தாசியின் இல்லத்தைக் கண்டு மன்னர் கும்பிடுவதைக் கண்ட சிலர் நகைக்க உண்மை அறிந்து கிருஷ்ணதேவராயர் கோபம் கொண்டு மாளிகையை இடிக்க உத்தரவிட்டதாகவும், ஆயி அரசரிடம் அவகாசம் பெற்று அம்மாளிகை இருந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் குளம் வெட்டினார்.

இதுவே முத்தரையர்பாளையம் ஆயி குளம் ஆகும். பின்னர் புதுச்சேரி பிரெஞ்சு குடியிருப்பான பின்பு, புதுச்சேரியில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க கவர்னர் போன்டெம்ப்ஸ் வேண்டுகோளின்பேரில், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் அனுப்பி வைத்த பொறியாளர் லாமைரெஸ்சே ஆயி குளத்திலிருந்து இன்று பாரதி பூங்கா உள்ள இடம்வரை கால்வாய் வெட்டினார். இது புதுச்சேரியின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்தது.

தனது மாளிகையை இடித்து குளம்வெட்டி மக்கள் தொண்டாற்றிய தாசியின் கதையை அறிந்த மூன்றாம் நெப்போலியன் பணித்ததின் பேரில் ஆயியைச் சிறப்பிக்கும் பொருட்டு இம்மண்டபம் ஏற்படுத்தப்பட்டது.

இது கட்டப்பட்ட காலம் 1852 --- 1870 ஆகும்.

Advertisement