பிரான்மலை வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை வடுகபைரவர்கோயிலில் ஜெயந்தன் பூஜை நடந்தது.
இந்திரன் மகன் ஜெயந்தன் மகாராஜா பெண்ணாசையால் சாபம் பெற்றார். பிறகு யோகபைரவர் முன் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.
இதை நினைவு கூறும் வகையில் பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயிலில் நேற்று ஜெயந்தன் பூஜை விழா நடந்தது.
காலை 10:00 மணிக்கு பி.மதகுபட்டி கிராமத்தார்கள் சார்பில் பால்குடஊர்வலம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
உமாபதி சிவாச்சாரியார்அபிஷேகம் ஆராதனைகளை நடத்தி வைத்தார். இரவு 8:30 மணிக்கு வெள்ளித் தேரில் வடுகபைரவர் வீதிவுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.