கல்வியை நவீனப்படுத்தும் மத்திய அரசு : பிரதமர் மோடி பெருமிதம்

11

புதுடில்லி: '' நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதற்காக கல்வியை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது ,'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டில்லியின் பாரத மண்டபத்தில் நடந்த கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 21வது நூற்றாண்டின் தேவையை எதிர்கொள்ள இந்தியாவின் கல்விஅமைப்பை நவீனப்படுத்ம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சர்வதேச கல்வித் தரத்தை மனதில் வைத்தே தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களை ஆதரித்து, கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் வழிகாட்ட வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை அளிக்க இந்திய இளம் தலைமுறையினர் தயாராகி வருகின்றனர்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இரு மடங்காகி உள்ளது. 2013 -14 நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது 1.25 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. 6 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு என மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேவை மற்றும் பொது நலத்துடன் வாழ்வதே உண்மையான வாழ்க்கை என வேதங்கள் கூறுகின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் சேவைக்கான ஊடகங்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement