டிராக்டர் வாங்கிய விவசாயிக்கு ஆர்.சி.,புக் தராமல் இழுத்தடிப்பு இழப்பீட்டுடன் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

கோவை; டிராக்டர் வாங்க கடன் பெற்ற விவசாயிக்கு, அதற்கான ஆர்.சி., புக்கை திரும்ப கொடுக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள புக்காலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தன். விவசாயியான இவர், டிராக்டர் வாங்குவதற்கு, கோவை, அவிநாசி ரோட்டிலுள்ள ஆர்பிஎல் வங்கியில் கடன் பெற்றார்.

கடன் செலுத்தி முடிக்கும் வரை, டிராக்டரின் வாகன பதிவு சான்றிதழை (ஆர்.சி., புக்)வங்கி நிர்வாகம் வைத்திருந்தது. கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும், ஆர்.சி., புக்கை தராமல் இழுத்தடித்தனர்.

ஆர்.சி., புக் தொலைந்து விட்டதாக பதில் அளித்தனர். வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும், பதில் அளிக்கவில்லை.

இதனால் ஆர்.சி., புக்கை திரும்ப தரக்கோரியும், மன உளைச்சலுக்கு இழப்பீடு கோரியும், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சிவானந்தன் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து ,சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரின் வாகன அசல் பதிவு சான்றிதழை, வங்கி நிர்வாகம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். வாகன பதிவு சான்றிதழை தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதற்குரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி, வங்கி நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement