சம்பளம் தராத ஷோரூம் மேலாளரை பழிவாங்க காரை திருடி மறைத்து வைத்த ஊழியர் கைது

அண்ணா நகர்,சம்பள பாக்கியை தராததால், ஷோரூம் மேலாளரை பழிவாங்கும் நோக்கில், ஆர்.டி.ஓ., பதிவுக்கு செல்ல இருந்த புதிய காரை, திருடி மறைத்து வைத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

அண்ணா நகரில், மூன்றாவது அவன்யுவில், 'ராஜலட்சுமி சுசுகி மாருதி' என்ற, கார் விற்பனையகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனைக்கு தயாரான 'பலேனோ' கார் ஒன்று, கடந்த 27ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு, பதிவு செய்வதற்காக கொண்டு செல்ல விற்பனையகத்தின் வாயிற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், காரின் சாவி மாயமானது. சாவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஊழியர்கள் விற்பனையகத்திற்கு வந்தபோது, வாயிற்பகுதியில் நிறுத்தியிருந்த, பதிவுக்கு செல்ல வேண்டிய காரும் மாயமானது.

இது குறித்து அண்ணாநகர் போலீசில் விற்பனையகத்தின் மேலாளர் சங்கர் புகார் அளித்தார்.

விற்பனையகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2:00 மணியளவில், மர்ம நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து, காரை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. வாகனத்தை, விற்பனையகத்தின் பின்புறத்தில், 'ஜெ பிளாக்' பகுதியில் நிறுத்தி சென்றுள்ளதும் தெரிய வந்தது.

காரை திருடிச் சென்றவர், விற்பனைகயத்தில் பணிபுரியும், பெரியார் நகரை சேர்ந்த ரமேஷ், 44 என்பவர் என, விசாரணையில் தெரிந்தது.

ஓராண்டுக்கு மேல் பணிபுரிந்து வந்த ரமேஷுக்கு, 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பாக்கி தரப்படவில்லை என, கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கேட்டும் மேலாளர் அலட்சியமாக இருந்ததால் அவரை அலைய விடுவதற்காக, காரை ரமேஷ் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

ரமேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement