அ.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏன்; பா.ஜ., பொதுச்செயலாளர் விளக்கம்

2

மதுரை : ''பா.ஜ., - அ.தி.மு.க.,வும் ஹிந்து உணர்வுமிக்க கொள்கை ரீதியாக ஒன்றிணைந்தவை'' என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.

மதுரையில் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் முருகபக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது.

இதில் பங்கேற்ற கருப்பு முருகானந்தம் நமது நிருபரிடம் கூறியதாவது: மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைவர். பழமையான திருப்பரங்குன்றம் மலையில் சிலர் அசைவ உணவை வைத்து களங்கப்படுத்தி விட்டனர். இம்மாதிரியான தீய சக்திகளுக்கு எதிரான உரிமை மீட்கும் மாநாடாக இது விளங்கும்.

ஓட்டு வங்கியை மனதில் வைத்து இது நடக்கவில்லை. பா.ஜ., - அ.தி.மு.க.,வும் ஹிந்து உணர்வுமிக்க கொள்கை ரீதியாக கூட்டணியாக ஒன்றிணைந்தவை.


சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசை தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தும். நடிகர் விஜய் போன்றவர்கள் பொதுஇடத்தில் பேசினால் கூட்டம் கூடுமே தவிர, ஓட்டுகளாக மாறாது. காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக விரைவில் மீண்டுமொரு 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நிகழ்த்தப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement