'பெப்சி' அமைப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வழக்கு
சென்னை: படப்பிடிப்பு, படத்தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க, 'பெப்சி' அமைப்பு மறுப்பதை எதிர்த்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த மனுவுக்கு, 'பெப்சி' உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் எனப்படும், 'பெப்சி' அமைப்புக்கு எதிராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், புதிய சங்கத்தை துவங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில், பெப்சி அமைப்பினர் பணிபுரிவதை நிறுத்த வேண்டும்; ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு, ஏப்ரல், 2ல் 'பெப்சி' கடிதம் அனுப்பி இருந்தது.
இதன் காரணமாக, படப்பிடிப்பு, படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவில் கூறியுள்ளதாவது:
பெப்சி அமைப்புக்கு எதிராக, சில தொழில்நுட்ப வல்லுநர்கள், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில், புதிய அமைப்பை துவக்கி உள்ளனர். அதற்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி, பெப்சி அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது சட்ட விரோதமானது.
'இதன் காரணமாக, ஏப்ரல், 8 முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி படப்பிடிப்பு, படத்தயாரிப்பு பணிகளை, எந்த வித இடையூறும் இல்லாமல் முடித்து கொடுக்கும்படி, பெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும். படப்பிடிப்பு, படத்தயாரிப்பு பணிகளில் தலையிட, பெப்சிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், மே, 7ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.