பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற எதிர்பார்ப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். விரைந்து புவிசார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இம்மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் 1000 முதல் 1500 எக்டேர் பரப்பில் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சுவையான அல்போன்சா, சப்பட்டை(பங்கனபள்ளி) மாம்பழ வகைகளுக்கு அடுத்தப்படியாக மே சீசனில் அதிகம் விற்பது பஞ்சவர்ணம் ரகம் தான்.

மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டு தோறும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் சுவையால் தனித்துவம் பெற்றதாலும், ராஜபாளையம் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுவதாலும், தோட்டக்கலைத்துறை உதவியுடன் மதுரை வேளாண் வணிக காப்பீட்டு மன்றம் சார்பில் புவிசார் குறியீடு பெற 2023 முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன் சேர்ந்து தான் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பஞ்சவர்ணம் ரக மாம்பழத்துக்கும் புவிசார் குறியீடு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் எழுந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்தாண்டு காய்ப்பு குறைந்துள்ளதாகவும், பஞ்சவர்ணம் மா விவசாயத்தை அதிகப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் மா விவசாயி முத்துபாலா கூறியதாவது: தனித்துவமான ஒன்றாக பஞ்சவர்ணம் ரக மாம்பழம் உள்ளது. அரசு விரைந்து புவிசார் குறியீட்டை அறிவிக்க வேண்டும். மா விவசாயத்தை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement