நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் அனல் மின் நிலையத்தில் துவக்கம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் அருகில் தலா, 1,320 மெகா வாட் திறனில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில், அனல் மின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்து வருகிறது.

இதற்கு தேவைப்படும் நிலக்கரி, எண்ணுார் துறைமுகத்தில் உள்ள மூன்றாவது நிலக்கரி முனையத்தில் இருந்து, 'கன்வேயர் பெல்ட்' வாயிலாக அனுப்பப்பட உள்ளது.

இதே வழித்தடத்தில், ஏற்கனவே உள்ள வட சென்னை, வட சென்னை விரிவாக்கம், வட சென்னை மூன்று ஆகிய அனல் மின் நிலையங்களுக்கும் நிலக்கரி அனுப்புவதற்கு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

எண்ணுார் துறைமுகத்தின் மூன்றாவது நிலக்கரி முனையத்திற்கு, கப்பலில் வரும் நிலக்கரியை எடுத்து, 'கன்வேயர் பெல்டில்' இறக்குவதற்கு, 197 கோடி ரூபாயில் இரு நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றின் செயல்பாட்டை, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். ஒவ்வொரு இயந்திரமும் ஒரு மணி நேரத்திற்கு, 2,600 டன் நிலக்கரியை இறக்கும் திறன் உடையவை.

இந்த இயந்திரங்கள் நிறுவும் பணிகளை, 24 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இரு மாதங்களுக்கு முன்கூட்டியே முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement