அக் ஷய திருதியை திருநாள் ரூ.300 கோடி நகை விற்பனை

திருப்பூர் : அக் ஷய திருதியை நாளான நேற்று, திருப்பூரில் உள்ள நகைக்கடைகள், விழாக்கோலம் பூண்டிருந்தன. நேற்று, ஒரே நாளில், மாவட்டம் முழுவதும் 300 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில், 600க்கும் அதிகமான நகைக்கடைகள் உள்ளன. திருப்பூர் நகரப்பகுதியில், கைராசியான நகைக்கடை என்ற பெயர் பெற்ற, முன்னணி நகைக்கடைகளும் இயங்கி வருகின்றன. அக் ஷய திருதியை சிறப்பு விற்பனை, கடந்த 28ம் தேதி துவங்கியது. அக் ஷய திருதியை நாளில், தங்கநகைகள் பெற்றுக்கொள்ளும் வகையில், முன்பதிவு நடந்தது. ஒவ்வொரு கடைகளும், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், பரிசு பொருட்கள் வழங்கின.

சேதாரத்தை குறைத்து சலுகை விலையில் விற்பனை நடந்தது. அனைத்து வாடிக்கையாளருக்கும், காமாட்சி விளக்கு, மஞ்சள், குங்குமம், இனிப்பு வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நகைக்கடையும், பச்சைப்பந்தல், வாழை மரம், மாவிலை தோரணம், மலர் அலங்காரம் என, விழாக்கோலம் பூண்டிருந்தன. நேற்று, அதிகாலை, 6:00 மணி முதல் நகைக்கடைகள் திறந்து, செயல்பட துவங்கின.

திருப்பூர் ஜூவல்லரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:

மகாபாரத்தில், கிருஷ்ண பகவான், திரவுபதிக்கு, அக் ஷய பாத்திரம் வழங்கிய நாள் தான், அக் ஷய திருதியை. அக் ஷய பாத்திரத்தை போல், இந்த சுபநாளில், எந்த பொருள் வாங்கினாலும், குறையாமல் பெருகி, சுபிட்சம் அளிப்பதாக இருக்கும். பல நுாற்றாண்டு காலமாக, அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது.

முன்பு இருந்ததை காட்டிலும், இந்தாண்டு அக் ஷய திருதியை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள், தங்களால் இயன்ற அளவு தங்க காசு மற்றும் நகைகளை வாங்கிச்சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. குடும்ப சகிதமாக வந்து, நகைக்கடைகளில், அக் ஷய திருதியை கொண்டாடி சென்றது போல் இருக்கிறது. மாவட்ட அளவில், 300 கோடி ரூபாய் அளவுக்கு தங்கநகை வியாபாரம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement