ரயிலில் இருந்து விழுந்த வியாபாரி படுகாயம்

பாலக்காடு : பாலக்காடு அருகே, ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த வியாபாரி படுகாயமடைந்தார்.

ஆந்திர மாநிலம், நெல்லுார் பகுதியை சேர்ந்தவர் மது, 36, கால்நடை வியாபாரியான இவர், நேற்று முன்தினம் காலை பாலக்காடு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் இருந்து ஊருக்கு ரயிலில் சென்றார்.

அப்போது, வாளையார் அருகே இரவு, 11:30 மணிக்கு ரயில் சென்ற போது, முகம் கழுவுவதற்காக கதவு பக்கம் சென்றார். திடீரென கால் தடுமாறியதில், திறந்திருந்த கதவு வழியாக, ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதை கண்ட சக பயணியர், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரயில்வே போலீசாரும், வாளையார் போலீசாரும் விரைந்து வந்து, அவரை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்துக்கு வெளிப்பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பினார்.

Advertisement