சிறுதானிய உணவு பொருள் விற்பனை அங்காடி திறப்பு 

புதுச்சேரி: ஆலங்குப்பத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான சிறுதானிய உணவு பொருள் விற்பனை அங்காடி மையத்தை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், சுய தொழில் துவங்கவும், சிறுதானிய உணவு பொருட்கள் விற்பனைக் கூடம் அமைக்கவும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.

அதனையேற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி வளாகத்தில் இருந்த பழைய கட்டடம், ரூ. 9 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான சிறுதானிய உணவுப் பொருள் விற்பனை அங்காடி மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதில், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், மகளிர் சுய உதவிக் குழுவினர், பா.ஜ., பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement