பசவண்ணர் உலகத்திற்கே குரு: சித்தராமையா பெருமிதம்

பெங்களூரு: ''பசவண்ணர் உலகத்திற்கு குருவானவர். சமூக புரட்சியை ஏற்படுத்தியவர்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பசவண்ணர் ஜெயந்தியை ஒட்டி, நேற்று பெங்களூரு சாளுக்கிய சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் சித்தராமையா மலர் துாவி வணங்கினார்.

பின் அவர் அளித்த பேட்டி:

பசவண்ணரை நினைவுகூர்வது ஒவ்வொரு கன்னடர், இந்தியரின் கடமை. அவரை கலாசார தலைவராக அரசு அடையாளப்படுத்தி உள்ளது. அவர் உலகத்திற்கே குருவானவர். சமூக புரட்சியை ஏற்படுத்தியவர். சமூக மாற்றத்தை கொண்டு வந்தவர்.

வரலாற்றில் நிரந்தர அடையாளத்தை விட்டு சென்றவர். தன் வாழ்நாளில் செய்த பணிகள் மூலம், மக்களின் மனதில் அழியாத வகையில் பதிந்துள்ளார்.

கோவில்களை நிராகரித்தவர் பசவண்ணர். உடலையே கோவிலாக மாற்றினார். சாமியார்களால் வகுக்கப்பட்ட சொர்க்கம், நரகம் என்பதை புறக்கணித்தார். வாழ்க்கை மீது அன்பு செலுத்த கூறினார்.

பகுத்தறிவற்ற, மூடநம்பிக்கைகளை நிராகரித்தார். செய்யும் தொழில் மூலம், ஒரு சமூக அந்தஸ்தை நிராகரித்து, அனைத்து தொழில்களும் புனிதமானவை என்றார்.

இன்று நாம் ஒரு முரண்பாடான சமூகம், அரசியல் அமைப்பின் கைதிகளாக உள்ளோம். இன்றைய காலகட்டத்தில் நான்கு திசைகளிலும் எதிரொலிக்கும் வன்முறை, பழிவாங்கல் என்ற முழக்கங்களை கேட்கிறோம்.

பசவண்ணர் வழங்கிய 'கருணையே மதத்தின் வேர்' என்ற அமைதி, நல்லிணக்கத்தின் மந்திரத்தை, நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பசவண்ணர் நம் அனைவருக்கும் அத்தகைய விழிப்புணர்வு ஒளியை பரப்பட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement