பால் லாரி மோதி பள்ளி மாணவர் பலி

பெங்களூரு: பெங்களூரில் பால் டேங்கர் வண்டியை முந்த முற்பட்டபோது கீழே விழுந்த, இருசக்கர வாகனத்தின் பயணித்தவர் மீது வாகனம் ஏறியதில் உயிரிழந்தார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஹர்ஷா, 17. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதி உள்ள அவர், முடிவுக்காக காத்திருக்கிறார். இவரது நண்பர் சச்சின், 17. நியூ பி.இ.எல்., சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு செல்லாத நேரங்களில், நண்பன் சச்சினுடன், நகைக்கடையில் ஹர்ஷா பணியாற்றி வந்தார்.

நேற்று அட்சய திரிதியை முன்னிட்டு, நகைக்கடைக்கு செல்ல, இருவரும் இரு சக்கர வாகனத்தில் டாடா இன்ஸ்டிடியூட் அருகே சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை சச்சின் ஓட்டினார்.

முன்னால் சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரியை முந்த சச்சின் முற்பட்டார். கட்டுப்பாட்டை இழந்து, வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். அந்நேரத்தில் பால் வண்டியின் பின்பக்க சக்கரம், ஹர்ஷா மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார்.

இதை பார்த்த அப்பகுதியினர், படுகாயம் அடைந்த சச்சினை, எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதாசிவ நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement