வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர்: போலீசார் கண்காணிப்பு தொடர்கிறது; இதுவரை 130 பேர் கைது

திருப்பூர் : 'டாலர் சிட்டி' என்று பெயர் பெற்ற திருப்பூரில், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி உ.பி., பீஹார், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் வேலை வாய்ப்புக்காக தங்கியுள்ளனர். இவர்கள் தவிர வெளிநாட்டை சேர்ந்தவர்களும், தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். தொழில் விஷயமாக, பல நாட்டவரும் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர்.
தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு, கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு 'புகலிடமாக' திருப்பூர் உள்ளது. தொழிலாளர்கள் என்ற போர்வையில் நடமாடி வரும் குற்றவாளிகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை போலீஸ் கைது செய்கின்றனர்.
நான்கு மாதத்தில் 130 பேர் கைது
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனம், வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் விளைவாக, கடந்த ஜன., முதல் தற்போது வரை பல்லடம், மங்கலம், நல்லுார், காலேஜ் ரோடு, வாவிபாளையம் என, பல பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், 130 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்களை திருப்பூர் அழைத்து வரும் ஏஜென்டுகள் யார், யார் என்பதை விசாரித்து, அவர்களின் நடமாட்டம் குறித்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, தொழில்துறையினர், வேலைவாய்ப்பு நிறுவனங்களை அழைத்து பல்வேறு விஷயங்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தீவிரமாகும் கண்காணிப்பு
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வடமாநிலத்தினர் போர்வையில் தங்கியுள்ள வங்கதேசத்தினர் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க வேறு இடங்களுக்கு வெளியேறுகின்றனர். அவர்களை கைது செய்யும் வகையில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற போக்குவரத்து உள்ள இடங்களில் போலீசார் கண்காணிக்கின்றனர்.
சந்தேகப்படுபவர்களின் ஆவணங்களை சரி பார்த்த பின்னரே அனுப்புகின்றனர். இதுதவிர, சொந்த காரணங்களை காட்டி ஜாமீன் கேட்கின்றனர். அப்படி மீறி சிறையில் இருந்து வருபவர்கள் தப்பித்து விடாமல் இருக்க அவர்களை முகாம்களுக்கு அனுப்பும் நடவடிக்கையை மாநகர போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வங்கதேசத்தவர் மீதான கண்காணிப்பு, ஆய்வு போன்றவை தீவிரமாக உள்ளது. இதன் எதிரொலியாக தான், இதுவரை, 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடரும் பட்சத்தில் இன்னும் அதிகளவில் கைதாவார்கள். எனவே, இவர்களின் ஊடுருவலை தடுக்கவும், அவர்களை கண்டுபிடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தங்கள் குடியிருப்பு பகுதியில் சந்தேகப்படுபவர்களின் நடமாட்டம் ஏதாவது இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.




மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு
-
உயர் ரத்த அழுத்தம் குறைய