பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுகளை சுத்தம் செய்ய ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கீடு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றை சுத்தம் செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் ரூ.5.55 கோடியில் 10 மாதத்தில் சீரமைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியை சேர்ந்த சதீஷ் பிரபு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் பார்த்திபனுார் மதகு அணையில் துவங்கி பரமக்குடி வரை நாணல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள், கழிவுநீர் என பெருகி உள்ளது.

இதனால் நீர்வழிப் பாதை தடைபடுவதுடன் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு சூழல் உள்ளது.

மேலும் மே 12ல் பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடப்பதால் பல்லாயிரம் பக்தர்கள் ஆற்றில் கூடுவதற்கு உள்ளனர்.

ஆகவே ஆற்றின் நிலையை கருதி சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜீவ் காந்தி கூறியதாவது:

வைகை ஆற்றை சுத்தம் செய்ய தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் சீர் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அரசு தரப்பில் வரும் 10 மாதத்திற்குள் சீர் செய்யப்படும் என்றும், இதற்காக 5 கோடியே 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை விரைவில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சித்திரை திருவிழாவிற்கு முன்னதாக மக்கள் கூடும் பகுதியில் வைகை ஆறு சீராகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement