லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!

16

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் வசிக்கும் லஷ்கர் தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு 4 மடங்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்.22ல் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி தரும்வகையில் இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நான்கு மடங்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:



பாகிஸ்தானின் லாகூரில் மக்கள் தொகை அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியான மொஹல்லா ஜோஹர் டவுனில் அமைந்துள்ள ஹபீஸ் சயீத்தின் வீடு ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பிறகு தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலையின் கீழ் வந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் இயக்கத்தினர் இணைந்து ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பை மேற்பார்வையிடுகின்றனர். அவன் தங்கியிருக்கும் வளாகத்தை கண்காணிக்க ட்ரோன் வசதி செய்யப்பட்டுள்ளது. 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சாலைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு - 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை சுமந்து வந்தாலும், சயீத் தொடர்ந்து பாகிஸ்தானில் வெளிப்படையாக வசித்து வருகிறான்.

இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement