பஸ் ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய ஒப்பந்தம்

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், 1.43 லட்சம் ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. இன்னும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வில்லை. 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து, பல்வேறு கட்ட முத்தரப்பு பேச்சு நடத்தியும் முடிவு காணப்படவில்லை.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சு நடத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கைள் குறித்து, தமிழக நிதித்துறையுடன் பேச்சு நடந்து வருகிறது.

வரும் வாரத்தில், போக்குவரத்து துறை சார்பில், புதிய பஸ்கள் இயக்கம், பஸ் நிலையம் திறப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து, இரண்டாவது வாரம் இறுதியில், பேச்சு நடத்த முடிவு செய்துள்ளோம். இம்மாதம் இறுதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement