அரவக்குறிச்சியில் ஜவகர் சிறுவர் மன்றம் தொடங்க வலியுறுத்தல்


அரவக்குறிச்சி
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரவக்குறிச்சியில் ஜவகர் மன்றம் துவங்க கலை ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக, ஜவகர் சிறுவர் மன்றம் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு, 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கலை பயிற்சிகளை வழங்கி வருகிறது. சிறார்களிடம் உள்ள கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம், 13 வகையான கலை பயிற்சிகளை ஜவகர் சிறுவர் மன்றம் வழங்குகிறது.
குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கைவினை, நாடகம், ஜிம்னாஸ்டிக்ஸ், மிருதங்கம், கராத்தே, கணினி, கீபோர்டு, வீணை, டிரம்ஸ், தையல், ஓவியம், திரையச்சு, யோகா மற்றும் சிலம்பம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது கோடைகாலப் பயிற்சி கரூரில் துவங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரவக்குறிச்சியில் இருந்து மாணவர்கள் கரூர் செல்வதில் சிரமம் இருக்கும் காரணத்தால், அரவக்குறிச்சியில் ஜவகர் சிறுவர் மன்றத்தை துவக்குவதன் வாயிலாக இப்பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற சிறார்களும் இலவச பயிற்சியில் சேர்ந்து பயனடைவர். அவர்களின் கலைத்திறனும் மேம்படும்.
மேலும் பள்ளிகளில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளுக்கு உதவிகரமாகவும், பயனளிக்க கூடியதாகவும் அமையும். எனவே, அரவக்குறிச்சியில் ஜவகர் சிறுவர் மன்றத்தை துவக்க
வேண்டும்.

Advertisement