மீன் கழிவுகள் கொட்டிய சரக்கு வேன் பறிமுதல்

பெண்ணாடம்: வெள்ளாற்றங்கரையில் மீன் கழிவுகளை கொட்டிய டாடா ஏஸ் வேனை பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

பெண்ணாடம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடக்கிறது.

கடந்த வாரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது என, இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் நேற்று காலை 11:00 மணிக்கு, வெள்ளாற்றங்கரையில் மீன் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாக பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சென்று பார்த்தபோது, டி.என். 31 - பி.டி. 8079 பதிவெண் கொண்ட கூண்டு அமைத்த டாடா ஏஸ் வேனில் இருந்து கழிவுகள் கொட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது.

இதையடுத்து டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பொது இடத்தில் மீன் இறைச்சி கழிவுகளை கொட்டியதற்காக அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement