வீடியோ பதிவிடும் இந்தியர்களுக்கு 3 ஆண்டுகளில் யூடியூப் கொடுத்தது 21 ஆயிரம் கோடி ரூபாய்!

5

மும்பை: ''யூடியூப் நிறுவனம் இதுவரை இந்திய வீடியோ பதிவிடுவோருக்கு, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. இந்தியாவில் மேலும் ரூ.850 கோடியை முதலீடு செய்யும்'' என யூடியூப் சி.இ.ஓ., நீல் மோகன் தெரிவித்தார்.


மும்பையில் நேற்று நடந்த 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டில் யூடியூப் சி.இ.ஓ., நீல் மோகன் பேசியதாவது: கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 10 கோடிக்கும் அதிகமான சேனல்கள் வீடியோக்களை அப்லோடு செய்துள்ளன. அவற்றில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேனல்கள் 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. யூடியூப் நிறுவனம், இதுவரை இந்திய வீடியோ பதிவிடுவோருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது.

வீடியோ பதிவிடுவோர் மற்றும் ஊடக நிறுவனங்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் இந்தியாவில் ரூ.850 கோடிக்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு இந்தியாவின் வீடியோ பதிவிடுவோர், அப்லோடு செய்த வீடியோக்களை வெளிநாட்டில் பயனர்கள் 45 பில்லியன் மணி நேரம் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) செலவிட்டு பார்த்துள்ளனர்.



இந்தியாவின் சிறப்பு என்ன என்பதை இந்திய வீடியோ பதிவிடுவோர் எடுத்துரைக்கின்றனர். குறிப்பாக வரலாறு, கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்களும் கண்டு களிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை, டிஜிட்டல் துறையில் வளர்ச்சியை உருவாக்கி உள்ளது. யூடியூப்பில் 2.5 கோடி அதிகமான சந்தாதாரர்களுடன், உலகின் எந்த தலைவருக்கு இல்லாத வகையில் பிரதமர் மோடி அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ளார். இவ்வாறு நீல் மோகன் பேசினார்.

Advertisement