முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

4


சென்னை: '' முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்'', என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியரின் ஜாதி சான்றிதழ் குறித்த விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாங்க் ஆப் பரோடா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுப்ரமணியம், கே . ராஜசேகர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. பழங்குடியினரின் ஜாதி சான்றிதழ் வழங்க அரசு வகுத்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும். இக்குழு விரைந்து விசாரிக்க வேண்டும்.


முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆறு வாரத்திற்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Advertisement