ஆறு மாவட்டங்களில் 6ம் தேதி கனமழை

சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 8ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. 6ம் தேதி கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தியில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக வேலுாரில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெயில் வாட்டியது.

Advertisement