நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? சூசக பதில் அளித்த நயினார்

1

சென்னை: தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் வர இன்னும் ஓராண்டு உள்ளது. விஜய்யுடன் கூட்டணியா என்பது குறித்து அப்போது தெரிவிப்போம் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.



தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த நயினார் நாகேந்திரன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணியில் யாராவது இணைகிறார்களா? அதற்கான பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறதா? நடிகர் விஜய் இணைவாரா? என்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பினர்.


அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு;


ஜாதிவாரி கணக்கெடுப்பை பொறுத்த வரை, தமிழக சட்டசபையில் நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மத்திய அரசு எது சொன்னாலு அதற்கு எதிராக மாநில அரசு சொல்லிக் கொண்டு இருக்கிறது.


கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்கணுமா, மாநில அரசு எடுக்கணுமா என நிறைய கேள்விகள் வந்து மத்திய அரசு தான் எடுக்கணும் என்று சட்டசபையிலேயே பேசியிருக்கிறோம்.


அதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவை ஒப்புதலோடு இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லி இருக்காங்க.


கேரளாவில் புதிய துறைமுகம் திறக்கப்பட்டதால் நமக்கு வர வேண்டிய திட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை. கன்னியாகுமரியில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே பல்வேறு திட்டங்களை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை.


தமிழக அரசாங்கம், விஜய் கட்சிக்கு மட்டுமல்ல, திருவல்லிக்கேணியில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சிக்கே தடை போட்டனர். கேட்டால் மண்டபத்தில் வைத்து நடத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர். தமிழக அரசாங்கம் எல்லாத்துக்கும் தடை போட்டுக் கொண்டு இருக்கிறது.


தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேட்கிறீர்கள். தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வர இன்னும் ஓராண்டு உள்ளது. அதை பார்த்துவிட்டு அப்போது பண்ணிக்கலாம்.


இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement