உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் சித்திரை விழா கொடியேற்றம்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள உள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

கொடி மரத்தைச் சுற்றிலும் தர்ப்பைபுற்களால் கட்டப்பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு மலர் மாலைகள் சூட்டப்பட்டது. முன்னதாக கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு 16 வகை அபிஷேகம் அலங்கார தீபராதனைகள் நடந்தது.

கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்களால் கொடி மரத்திற்கு தீப துாப சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் உற்ஸவ விழா நடக்கிறது. அதனை முன்னிட்டு பேச்சி வாகனம், சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷப வாகனம் உள்ளிட்டவைகளுடன் வெளிப்பிரகார வீதி உலா நடக்கிறது.

மே 9 மாலை 5:00 மணிக்கு அலங்கார மண்டபத்தில் திருக்கல்யாண உற்ஸவமும், மறுநாள் மே 10ல் பெரிய தேரோட்டமும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு உத்தரகோசமங்கை கோயிலில் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement