தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்

7

திருவனந்தபுரம்: கேரளாவில் நாய்க்கடிக்கான தடுப்பூசியை போட்ட பிறகும், குழந்தைகள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மாதம் 7 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தெருநாய் ஒன்று சிறுமியை கடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர், சிறுமியை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்த பிறகு, தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு சிறுமிக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட்ட பிறகு, ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த சிறுமிக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டதால், திருவனந்தபுரத்தில் உஙளள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்ரீ அவிட்டம் திருநாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.


அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், அவருக்கு ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொண்ட பிறகும், சிறுமிக்கு அந்த தொற்று பரவியதால், தடுப்பூசியின் தன்மை மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மலப்புரத்தில் 6 வயது சிறுமி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும், உயிரிழந்தார்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு சிறுமியும் பாதிக்கப்பட்டிருப்பது தடுப்பூசியின் மீது பெற்றோருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


இந்த நிலையில், ஸ்ரீ அவிட்டம் திருநாள் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எஸ்.பிந்து கூறுகையில், "துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு தடுப்பூசிகள் மீது குறை கூற முடியாது. காயத்தின் தீவிரம் மற்றும் நோய்த்தொற்று பரவலின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளின் செயல்திறன் இருக்கும்," எனக் கூறினார்.

Advertisement