பரமக்குடியில் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் வேண்டும்; சட்டசபையில் எம்.எல்.ஏ., முருகேசன் பேச்சு

பரமக்குடி : பரமக்குடியில் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று எம்.எல்.ஏ., முருகேசன் சட்டசபையில் பேசினார். அவர் பேசியதாவது:

பரமக்குடி நகராட்சியில் அதிக மக்கள் தொகை உள்ளதால் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். முதல் நிலையாக உள்ள நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். காக்கா தோப்பு பகுதியில் இருந்து எமனேஸ்வரம் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

பரமக்குடி மக்கள் தொகையை கருத்தில் கொண்டு எஸ்.அண்டக்குடி ஊராட்சி பகுதியில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும். வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க 36 கோடி ரூபாயில் பணிகள் துவக்கப்பட உள்ளது. அதேபோல் வலது பிரதான கால்வாயில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நிதி ஒதுக்க வேண்டும்.

பரமக்குடியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசு இலவச பயிற்சி மையம் வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி பேசினார்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Advertisement