தொண்டி அருகே மாடுகள் திருட்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

தொண்டி, : தொண்டி அருகே மாடுகளை திருடி காட்டுபகுதியில் கட்டி வைத்திருந்த போது கிராம மக்கள் சென்று மாடுகளை மீட்டனர். போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

தொண்டி அருகே கிராமங்களில் கால்நடை வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து பிழைப்பு நடத்துகின்றனர். இந்நிலையில் ஆடு, மாடு திருட்டு இப்பகுதியில் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் வீரசங்கலிமடம் செல்லியம்மன் கோயில் பின்புறம் கானாட்டாங்குடியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மற்றும் சிலருக்கு சொந்தமான பசுமாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள மூன்று பசு மாடுகளை திருடிச் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் கட்டி வைத்தனர்.

தகவல் கிடைத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்று மாடுகளை கைப்பற்றி, திருடர்களை தொண்டி போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., முருகானந்தம் விசாரணை செய்ததில் முகிழ்த்தகம் கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவன், பிரதீப் 25, தாமஸ் 24, புதுக்காடு சேது 23, நம்புதாளையை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிந்தது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், மாடுகளை திருடுவோர் மாடுகளை திருடி கண்மாய்க்குள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டி வைப்பார்கள். இரவில் சரக்கு வாகனங்களில் மாடுகளை ஏற்றி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் நிறைய மாடுகள் திருடு போயுள்ளன என்றனர்.

Advertisement