பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி, கப்பல்களுக்கு மத்திய அரசு தடை!

3

புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களுக்கும் , பார்சல் மற்றும் மெயில் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


@பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தி வருகிறது. இரு நாடுகள் இடையே எல்லையில் பதற்றமும் அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 9வது நாளாக தொடர்ந்து சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருகிறது.


இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு விதிவிலக்கு தேவை என்றால் மத்திய அரசின் முன் ஒப்புதல் அவசியம்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நுழைய தடை!

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகத்திற்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களும் பாகிஸ்தானிற்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


அதேபோல், பாகிஸ்தானில் இருந்து மெயில் மற்றும் பார்சல் சேவைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

Advertisement