ரூ.100 கோடி மோசடி செய்த தம்பதி கைது

சேலம்,:அறக்கட்டளை நடத்தி, 100 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 6 ஆக உயர்ந்துள்ளது.

சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நடத்தி, இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, 48, அவரது கூட்டாளிகள் ஜெயபிரதா, 47, பாஸ்கர், 49, சையது முகமது, 44, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர்கள், தற்போது வரை, சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில், தினமும் ஆஜராகி கையெழுத்திடுகின்றனர். முன்னதாக அவர்களிடம், 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மோசடியில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார், 54; அவரது மனைவி கரோலின் ஜான்சிராணி, 47, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

தம்பதியர் ஜாமின் மனுவை, கோவை டான்பிட் நீதிமன்றம் கடந்த மார்ச், 11ல் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அத்துடன் செந்தில்குமார் வங்கி கணக்கில், 2 கோடி, அவரது மனைவி கணக்கில், 1.50 கோடி ரூபாய் வங்கியில் முடக்கப்பட்டன. இதனால் டில்லி, பீஹாரில் அடுத்தடுத்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட தம்பதியர், சேலத்தில் மாறு வேடத்தில் உலா வந்த நிலையில் சிக்கி கைதாகினர்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், செந்தில்குமார் மதம் மாறியது தெரிந்தது. மனைவி மூலம் அறிமுகம் ஆன விஜயபானுவை, சேலம் அழைத்து வந்து அறக்கட்டளை தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு செந்தில்குமார் மூளையாக செயல்பட்டு, மக்களை மூளைச்சலவை செய்து, பணத்தை முதலீடாக பெற்றுள்ளனர். மேலும், அவரிடம் பணியாற்றிய சசிகலாவுக்கு, காரிப்பட்டி அருகே, 1.60 ஏக்கர் நிலம் இருந்தது.

அந்த நிலத்தை மோசடியாக அபகரித்து, அதில் நீச்சல் குளம் உட்பட சகல வசதிகளுடன் பங்களா கட்டி, செந்தில்குமார் வசித்தது தெரியவந்துள்ளது. தற்போது அந்த நிலத்தின் மதிப்பு, 3 கோடி ரூபாய். கைதான தம்பதியுடன் சேர்ந்து, இந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் மீதுள்ள அசையா சொத்துகளை, அடையாளம் காணும் பணி நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement