திறக்கப்படாத இலங்கை அகதிகள் முகாம் வீடுகள்

காரியாபட்டி : இலங்கை அதிகளில் முகாம் வீடுகள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது, ரூ. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை, பராமரிப்பின்றி கிடப்பது, ஊருணியில் கழிவு நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

மல்லாங்கிணர் பேரூராட்சியில் மக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க, மந்தை ஊருணியில் ரூ. பல லட்சம் செலவில் நடைபாதை அமைக்கப்பட்டது. சரிவர பராமரிக்காததால் புதர் மண்டி கிடக்கிறது. விளக்குகள் எரியவில்லை. திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் மக்கள் யாரும் நடைபாதையாக பயன்படுத்த முடியவில்லை. அதேபோல் சலுகை ஊருணியில் கழிவு நீர் தேங்குவதால் பாசி படர்ந்து உள்ளது. துர்நாற்றத்தால் அக்கம் பக்கத்தில் குடியிருக்க முடியவில்லை.

இலங்கை அகதிகள் முகாம் ரூ. 2 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டன. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்துள்ளன. வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

கழிவு நீரால் சுகாதாரக்கேடு



ராமன், தனியார் ஊழியர்: வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சலுகை ஊருணியில் தேக்கப்படுகிறது. துர்நாற்றம் ஏற்பட்டு அக்கம்பக்கத்தில் மக்கள் குடியிருக்க முடியவில்லை. புழு பூச்சிகள் உண்டாகின்றன. கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. பச்சை பசேல் என உள்ளதால் பார்க்க அருவருப்பாக காணப்படுகிறது. கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதரான நடைபாதை



மணி, தனியார் ஊழியர்: மந்தை ஊருணியில் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க ரூ. பல லட்சம் செலவில் நடைபாதை அமைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தன. சரிவர பராமரிக்காததால் புதர் மண்டி கிடக்கின்றன. புற்கள் முளைத்து விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

முகாம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும்



சுப்புராஜ், தனியார் ஊழியர்: இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 40 குடும்பங்களுக்கு மறு வாழ்வு முகாம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டன. ரூ பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகின. இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. பழைய வீடுகளில் மழை நேரங்களில் குடியிருக்க முடியவில்லை. எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலை உள்ளது. விரைந்து மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement