மேகமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்; தினமும் ஆயிரம் கார்கள் படையெடுப்பு

கம்பம் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க - மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தினமும் 700 முதல் ஆயிரம் கார்கள் வருவதாக வனத்துறை சோதனை சாவடியில் கூறுகின்றனர்.

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் உக்கிரத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் கோடைவாசல் தலங்களை நாடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் மூனாறு, கொடைக்கானலுக்கு இணையாக மேகமலை பகுதிகள் உள்ளன.

இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் செல்லும் மலை ரோட்டில் வாகனம் ஏறத் துவங்கியதும், ஜில் காற்று சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது. ஹைவேவிசிலிருந்து மணலாறு செல்லும் வரை ரோட்டின் மேற்கு பக்கம் நீண்டுள்ள மணலாறு ஏரியும், அதில் தண்ணீர் குடிக்க வரும் யானைகள், காட்டு மாடுகள் என வன உயிரினங்களை பார்த்து பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர். தூவானம் மற்றும் மகாராஜா மெட்டிலிருந்து பார்த்தால், கம்பம் பள்ளத்தாக்கு முழுமையாக தெரியும்.

இயற்கையை ரசிக்க கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்து வருகின்றனர்.

தேனி மட்டுமல்லாது அண்டை மாநிலத்தினரும் அதிகளவில் வருகின்றனர். நான் ஒன்றுக்கு 700 முதல் ஆயிரம் வாகனங்கள் வருவதாக வனத் துறை சோதனை சாவடி புள்ளி விபரம் தெரிவிக்கிறது. வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து மது பாட்டில்கள், பிளாஸ்டிக், பாலிதின் பைகளை பறிமுதல் செய்வதில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவதிப்படும் சுற்றுலா பயணிகள்



மேகமலை பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாப்பிடுவதற்கு நல்ல ஒட்டல்கள், ஸ்நாக்ஸ் கடைகள், உட்காருவதற்கு இருக்கைகள் , பாத்ரூம் வசதி கிடையாது. இதனால் கார்களில் சென்றவாறு சுற்றி வருகின்றனர். சூழல் சுற்றுலாவை அறிமுகம் செய்ய வனத்துறை முன்வர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement