மாரியூரில் சித்ரா பவுர்ணமி உற்ஸவம் மே 12ல் கடலுக்குள் வலை வீசும் படலம்

சாயல்குடி : சாயல்குடி அருகே பழமையும் புராதான சிறப்பும் பெற்ற வருண பகவானால் பூஜிக்கப்பட்ட பவள நிறவல்லியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி உற்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.

நேற்று காலை 10:30 மணிக்கு கோயில் சன்னதி முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக மூலவர்கள் பவள நிறவல்லியம்மன், பூவேந்திய நாதருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

சிவ நாம அர்ச்சனை முழங்க கொடி மரத்தில் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி கோயில் சிவாச்சாரியார்களால் நடந்தது.

தொடர்ந்து பத்து நாட்களும் காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜையும் மாலை 6:00 மணிக்கு சுவாமி அம்மன் புறப்பாடு நடக்கிறது.

மே 12 காலை 7:00 மணிக்கு மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமான் வேடமணிந்த குருக்கள், தொல்லை தந்த சுறா மீனை வென்று அதற்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நிகழ்த்தி காண்பிக்கப்படுகிறது.

சிவபெருமானின் 57வது படலம் வலைவீசும் திருவிளையாடல் காட்சியை காண்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர்.

காலை 10:00 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement