தமிழகத்தில் 'நீட்' தேர்வு 1.50 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுதும் நேற்று நடந்தது. தமிழகத்தில், 1.50 லட்சம் மாணவ - மாணவியர் உட்பட, நாடு முழுதும், 22 லட்சம் பேர் பங்கேற்றனர். சென்னையில், 44 தேர்வு மையங்களில், 21,960 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.

நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் 2:00 முதல் மாலை 5:20 மணி வரை நடந்தது.

கட்டுப்பாடுகள்

நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, காலை 11:30 முதல் மதியம் 1:30 மணி வரை, தேர்வு மையத்துக்குள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், வந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அடையாள அட்டை, ஹால் டிக்கெட் மறந்த மாணவர்களும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு கூடத்துக்குள் செல்ல மொபைல் போன், கைக்கடிகாரம், உலோக தாயத்து, கொண்டை ஊசி, வெள்ளி அரைஞாண் உள்ளிட்டவை அகற்றப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

ஒளி ஊடுருவும் தண்ணீர் பாட்டில்கள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. மாணவியர் ஜடை பின்னலுக்கு அனுமதிக்கப்படவில்லை.

அவதி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லுாரியில், நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதே வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று, திருமணம் நடந்தது.

அதற்கு வந்தவர்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்றதால், தேர்வு மையத்தை கண்டறிவதில், மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

மற்ற இடங்களில், நீட் தேர்வு வளாகத்தில், பெற்றோருக்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த மையத்தில் திருமணம் நடத்த, என்.டி.ஏ., எப்படி அனுமதி அளித்தது என, காவலர்களிடம் பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.

போலீசின் உதவிக்கரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு மையத்திற்கு செல்ல வேண்டிய மாணவி, வேறொரு மையத்திற்கு சென்று, தான் மாறி வந்ததை அறிந்து அழுது கொண்டிருந்தார்.

அவரை ஆசுவாசப்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சரியான மையத்திற்கு சரியான நேரத்தில், ஜீப்பில் அழைத்து சென்றார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்தது.

அதேபோல, மதுரையில், தன் ஆதார் கார்டை எடுத்து வர மறந்த மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த போலீஸ் விஜயலட்சுமி, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, ஆதார் கார்டை பெற்று, மாணவரை தேர்வு கூடத்துக்குள் அனுப்பி வைத்தார்.

அதேபோல, கோவையில், ஆதார் நகலை மறந்து வந்த மாணவருக்கு, போலீசாரே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, 'பிரின்ட்' எடுத்து தந்துள்ளனர்.

விழுப்புரம் அண்ணா கலை கல்லுாரிக்கு, மதியம் 1:50 மணிக்கு வந்த மாணவி, தவறுதலாக வேறு மையம் சென்றதாக கூறி அழுத நிலையில், அவர் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.

Advertisement