மெரினா கடற்கரையில் குடிநீர் மையங்கள் மூடி கிடப்பதால் தாகத்தில் பயணியர் தவிப்பு

சென்னை: சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட மக்கள் வரத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில், கடற்கரையில் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.

இதனால் பயணியர், வேறு வழியின்றி மணற்பரப்பில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு, தரமற்ற குடிநீரை வாங்கி பருகும் நிலை உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மணற்பரப்பில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், சுகாதாரத் துறையினர் யாரும் கடைகளில் ஆய்வு மேற்கொள்வதில்லை' என்றனர்.

மெரினா கடற்கரையில் மாதந்தோறும், மண்டல சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழிப்பது வழக்கம். இதனால், பொருட்கள் விற்பனைகளில் வியாபாரிகள் கவனம் செலுத்தி வந்தனர்.

தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு என, ஆண்டுக்கணக்கில் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டதால், தரமற்ற பொருட்கள் விற்பனைக்கு வழிவகுத்துவிட்டது.

இதற்கு, மாநகராட்சி கமிஷனர் உரிய தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement