'நீட் தேர்வு கடந்தாண்டை விட கடினம்'; இயற்பியலில் சிரமம் என பேட்டி

கோவை; நீட் தேர்வுகள் நேற்று முடிந்துள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் கேள்விகள் கடினமாக இருந்ததாக, இரண்டாம் முறை தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று , 14 மையங்களில் நீட்., நுழைவுத்தேர்வுகள் பலத்த கண்காணிப்புடன் நடத்தப்பட்டது. தேர்வு மையங்களுக்குள், 11:00 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம் போல், கயிறு, கம்மல், செயின் அனைத்தும் கழட்டிய பின்னரே, பல மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

6,994 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 6,760 பேர் தேர்வில் பங்கேற்றனர். 234 பேர் பங்கேற்கவில்லை. மொத்தம், 96.65 சதவீதம் பேர் பங்கேற்றனர்.

வழக்கம்போல், இயற்பியல் கேள்விகள் மாணவர்களை சோதிக்கும் வகையில் அமைந்தது. வேதியியல் கேள்விகள் நடுநிலையாகவும், தாவரவியல், விலங்கியல் பிரிவு கேள்விகள் எளிதாகவும் இருந்ததாக, பல மாணவர்கள் ஒரே மாதிரியான கருத்தை தெரிவித்தனர்.

மாணவர்கள் கூறியதென்ன?



ஸ்ரீராம், வடவள்ளி: தேர்வு எளிதாக இருந்தது என்று கூறமுடியாது. இயற்பியல் கேள்விகள் சோதித்துவிட்டன. வேதியியலில் ஓரளவு சமாளித்து விட்டேன். பயாலஜி கேள்விகளை எளிதாக எதிர்கொண்டேன்.

ஆதிஷ், இருகூர்: இயற்பியல் கேள்விகள் நீளமாக, கான்சப்ட் போன்று இருந்தது. அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்படி கேள்விகள் அமைக்கப்பட்டு இருந்தன. வேதியியல், பயாலஜி கேள்விகள் நேரடியாக இருந்ததால், எளிதாக இருந்தது. நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு என்பதால், தெரியாத கேள்விகளை அதிகம் தவிர்த்துள்ளேன்.

ராஜேஸ்வரி, சங்கனுார்: இரண்டாம் முறையாக தேர்வு எழுதுகிறேன். முதல் முறையை விட தற்போதைய கேள்விகள் கடினமாக இருந்தன. எனக்கு, இயற்பியல், வேதியியல் பிரிவு கடினமாக இருந்தது.

நிஷா, ஊட்டி: இயற்பியல் கடினமாக இருந்தது. பயிற்சி செய்த கேள்விகள் வந்திருந்தன. நன்றாக எழுதியுள்ளேன். எதிர்பார்த்த இடம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

Advertisement