வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்

பந்தலூர்: பந்தலுார் அருகே வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு கோரி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.


பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் கொம்பன் யானை ஒன்று, முகாமிட்டு உள்ளதுடன் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் நடந்து வருவதை வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் இதுவரை யாரையும் தாக்காத நிலையில், அதிக அளவு வாகனங்களை சேதப்படுத்தி உள்ளது.



இந்த யானையை அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 7.15 மணிக்கு, இங்குள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த வேறொரு ஆண் யானை, வி.ஏ.ஓ. அலுவலகம் வழியாக, சாலைக்கு இறங்கி வந்துள்ளது. அங்கு நின்றிருந்த இளைஞர் ஒருவர் ஓடி உயிர் தப்பிய நிலையில், அங்கு நிறுத்தி இருந்த ஜெமீர் என்பவரின் காரன் கதவை தந்ததால் குத்தி சேதப்படுத்தியது.


பின்னர் சாலையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு இறங்கி செல்லும் தாழ்வான படிக்கட்டுகளில் இறங்கி, ஒற்றையடி நடைபாதை வழியாக நடந்துள்ளது. செய்தலவி என்பவரின் வீட்டின் பின்பக்க தடுப்பை உடைத்து உள்ளே சென்ற யானை மறுபக்க தடுப்பையும் உடைத்து, வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நடந்து நடைபாதை வழியாக இறங்கி புதற்குள் சென்றுள்ளது.


யானை நடைபாதையில் வருவதைப் பார்த்து ஓடி உயிர் தப்பிய சவுகத்,60, என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர்ச்சியாக யானைகளால் இப்பகுதி மக்கள் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலையில், யானை தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி இப்பகுதி மக்கள் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் உஸ்மான் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அங்கு வந்த உதவி பண பாதுகாவலர் அருள்மொழி வர்மன், டி.எஸ்.பி ஜெயபாலன், வனச்சரகர் ரவி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் வரும் 9ம் தேதி வன அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.



அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தமிழகம் கேரளா இடையே சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வனக் குழுவினர் அங்கு முகாமிட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் சாலைக்கு வராமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement