ராஜஸ்தானுக்கு முதல் தங்கம்: 'கேலோ இந்தியா' துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டின் முதல் தங்கத்தை ராஜஸ்தான் தட்டிச் சென்றது.
பீஹாரில், 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நடக்கிறது. துப்பாக்கி சுடுதல், சைக்கிள் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.


டில்லியில் நடந்த துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் பிராச்சி, மயங்க் சவுத்ரி ஜோடி, உ.பி.,யின் தேவ் பிரதாப், உர்வா சவுத்ரி ஜோடியை சந்தித்தது. விறுவிறுப்பான போட்டி 15-15 என 'டை' ஆனது. பின் 'ஷூட்அவுட்' முறையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, இம்முறை முதல் தங்கத்தை கைப்பற்றியது. கடந்த முறை வெள்ளி வென்ற ராஜஸ்தான் அணியில் பிராச்சி இடம் பெற்றிருந்தார்.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் டில்லியின் ஹர்திக் பன்சால், நியாமிகா ராணா ஜோடி 16-14 என ஹரியானாவின் பிரதிக் ஷியோகன்ட், கனக் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
நீச்சல் போட்டியில் கர்நாடகா நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். நேற்று வழங்கப்பட்ட 7 தங்கப்பதக்கத்தில், 4ஐ தட்டிச் சென்றனர். மஹாராஷ்டிரா, கேரளா, அசாம் அணிகளுக்கு தலா ஒரு தங்கம் கிடைத்தன.


ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் தமிழகத்தின் ஸ்மரன் சர்வேஷ் 6-2 என, உ.பி.,யின் விஷுவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.

Advertisement