'தாய் அகார்' கடிதம் எழுதும் போட்டிநாமக்கல் மாணவி மாநிலத்தில் முதலிடம்

நாமக்கல்:அஞ்சல் துறை சார்பில் நடந்த, 'தாய் அகார்' கடிதம் எழுதும் போட்டியில், நாமக்கல்லை சேர்ந்த மாணவி, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில், 'தாய் அகார்' கடிதம் எழுதும் போட்டி, தேசிய அளவில் நடத்தப்பட்டது. 'எழுதுவதின் மகிழ்ச்சி: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற கருப்பொருளில், 2024 செப்., ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும், (18 வயதுக்குட்பட்டோர், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்) மாநில அளவில் முதல் பரிசு, 25,000 ரூபாய், இராண்டாம் பரிசு, 10,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய், தேசிய அளவில் முதல் பரிசு, 50,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 25,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 10,000 ரூபாய் வழங்கப்படும் என,

அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில், நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில், கையால் எழுதப்பட்ட, 968 கடிதங்கள் ஏற்கப்பட்டு, முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழகம் வட்டம் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், நாமக்கல்லை சேர்ந்த நாராயணா இ -டெக்னோ பள்ளி மாணவி அக்ஷயாஸ்ரீ, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். நாமக்கல் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவிக்கு முதல் பரிசாக, 25,000 ரூபாய்க்கான காசோலை, சான்றிதழை, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா வழங்கி பாராட்டினார்.

Advertisement