உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை

சென்னை:'யாரும் உரிமை கோராத மனித உடல்களை, கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய, உள்ளாட்சி அமைப்புகள் நிதி ஒதுக்க வேண்டும்' என, மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

வேலுார் மாவட்டம், சோளிங்கர் அரசு மருத்துவமனையில், 2018ல் ராஜாராமன் என்ற, 70 வயதான முதியவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, திடக்கழிவுகளை அகற்ற பயன்படுத்தும் மூன்று சக்கர வண்டியில், அனைவரும் பார்க்கும் வகையில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இறந்த முதியவர் ராஜாராமனுக்கு, உறவினர்கள் யாரும் இல்லை. அவரது உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. அதனால், திடக்கழிவுகளை கொண்டுச் செல்லும் மூன்று சக்கர வாகனத்தில், அவரது உடலை கொண்டுச் சென்றுள்ளனர். இதனால், மரணத்திற்கு பிந்தைய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இது மனித உரிமையை மீறிய செயல்.

இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். இறந்தவர்களுக்கு கண்ணியமான முறையில், இறுதி நிகழ்வுகள் நடக்க வேண்டும். உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதை, உணர்வுபூர்வமாக அணுக வேண்டும்.

தமிழகம் முழுதும் உரிமை கோரப்படாத உடல்களை, கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக, தமிழக அரசு உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் உரிமை கோரப்படாத உடல்களுக்கு, பாரம்பரிய முறையில் இறுதி சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement