இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவைசெல்லமுத்து வலியுறுத்தல்

பல்லடம், : பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என, தமிழக அரசுக்கு, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சமீபத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல், டெல்டா மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வங்கி கடன் பெற்று தொழில் செய்து வரும் விவசாயிகள் பலர், என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர். வாழை, நெல் பயிரிட்டு நஷ்டத்தை சந்தித்துவரும் விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை தமிழக அரசு, வேளாண் துறை முறையாக எடுக்க வேண்டும்.
இதுபோல், பயிர்களால் ஏற்படும் நஷ்டத்துக்கு, தமிழக அரசு, 75 சதவீத இழப்பீடு வழங்கி வருகிறது. இது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயன் அளிக்காது. வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாமல், விவசாயிகள் மீண்டும் கடன் பெற்று தொழில் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர். ஒரு வருவாய் கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ளது.
இதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. எனவே, இந்த விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில், எந்த ஒரு கிராமத்தில் உள்ள விவசாயியும், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும்போது, அது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வகையில், தமிழகம் முழுவதும், சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் மற்றும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து தெளிவான கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.