விபத்துகளில் காயம் அடைவோருக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவச சிகிச்சை
புதுடில்லி: சாலை விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு, முதல் ஏழு நாள் வரையில், 1.50 லட்சம் ரூபாய் வரை, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுதும் கடந்த, 2023ம் ஆண்டு, 4.80 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
விபத்துகளின் போது உரிய நேரத்தில் முறையான சிகிச்சை கிடைக்காததால், உயிரிழப்புகள் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து, சாலை விபத்தில் காயம் அடைந்தோருக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் சோதனை முறையில் சண்டிகரில் மட்டும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், இலவச மருத்துவ திட்டத்தை நாடு முழுதும் விரிவுபடுத்துவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சாலை விபத்துகளில் காயம் அடைவோருக்கான இலவச சிகிச்சை திட்டம், 2025, மே 5 முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது.
மோட்டார் வாகனங்களில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் அடையும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைக்கான தகுதி பெறுவர்.
போலீஸ், மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், தேசிய சுகாதார ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்தும்.
விபத்து நடந்த நாளில் இருந்து முதல் ஏழு நாட்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையில் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சிகிச்சை அளிக்கப்படும். பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் முதலுதவிக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்.
இத்திட்டம் செயல்படுவதை கண்காணிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை செயலர் தலைமையில், 11 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.