இடுக்கியில் தெரு நாய்கள் அதிகரிப்பு 4 மாதங்களில் 2525 பேர் பாதிப்பு

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 2525 பேர் நாய்கடிக்கு உள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு மாதத்தில் நாய்கடிக்கு உள்ளான மூன்று குழந்தைகள் பலியாகினர். தடுப்பூசி செலுத்தியும் குழந்தைகள் இறந்ததால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 2525 பேர் நாய்கடிக்கு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவிர தனியார் மருத்துவமனைகளிலும், வெளி மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் அதிகார பூர்வமாக 3268 தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிராமப் புறங்களிலும், தோட்ட பகுதிகளிலும் முறையாக கணக்கிடப்படாததால் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.

மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, வாகமண் உள்பட பல்வேறு முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நுாற்றுக் கணக்கில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊராட்சி தோறும் நாய்கள் பராமரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.

அதனை ஊராட்சிகள் கடைபிடிக்கவில்லை. சுற்றுலாப் பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement