இந்தியா கொடுத்த ஏழாவது அடி; இனி எழ முடியாது பாகிஸ்தான்...

1

இந்தியாவிடம் 'அடி' வாங்குவது பயங்கரவாத ஆதரவு நாடான பாகிஸ்தானுக்கு வாடிக்கையாக உள்ளது. இதுவரை ஏழுமுறை பாகிஸ்தானை இந்தியா தாக்கியுள்ளது.

முதல் காஷ்மீர் போர்



1கடந்த 1947ல், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் தனிப்பகுதியாக இருந்தது. காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். ஆட்சி செய்த ஹிந்து மன்னர் ஹரி சிங், தனி நாடாக செயல்பட விரும்பினார். இவருக்கு எதிராக கிளர்ச்சியை துாண்டியது பாகிஸ்தான். காஷ்மீர் பழங்குடியினருக்கு ஆயுதங்கள் வழங்கியது.


இதையடுத்து மன்னர், இந்தியாவின் உதவியை நாடினார். படைகளை இந்தியா அனுப்பியது. 1947 அக். 22 - 1948 டிச., 31 வரை போர் நடந்தது. போர் முடிவில் இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இந்தியாவில் 7,000 பேரும், பாகிஸ்தானில் 20,000 பேரும் பலியாகினர். அப்போது காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு பாக்., வசம் இருந்தது. இப்பகுதி பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.

இரண்டாவது காஷ்மீர் போர்



2'காஷ்மீர் எங்களுடையது' என வலியுறுத்தி, மீண்டும், 1965 ஆகஸ்டில் 'ஆப்பரேஷன் ஜிப்ரால்டர்' என்ற பெயரில் பாக்., தாக்குதலை துவங்கியது. இதற்கு இந்தியா பெரியளவில் படைகளை அனுப்பி பதில் தாக்குதல் நடத்தியது.


ரஷ்யா, அமெரிக்கா தலையீட்டில் உஸ்பெகிஸ்தானின் தாஷ்காண்ட் நகரில், இந்திய பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி - பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

வங்கதேசம் உதயம்



3ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கியபோது, மேற்கு பாக்., (தற்போதைய பாகிஸ்தான்), கிழக்கு பாக்., (தற்போதைய வங்கதேசம்) என இரு பகுதியாக இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் உருது, கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசும் மக்கள் அதிகம். ஆனால் பாக்., அலுவல் மொழியாக உருது மட்டுமே இருக்கும் என ஜின்னா அறிவித்தார். இதனால் கிழக்கு பாக்., மக்கள் தனிநாடு போராட்டத்தை துவங்கினர்.


கடந்த 1971 மார்ச் 26ல் 'வங்கதேச விடுதலைப் போர்' துவங்கியது. இரு தரப்புக்கும் சண்டை நடந்தது. வங்கதேச தனிநாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 1971 டிச., 3ல் போரில் இறங்கியது. இந்தியாவின் தரை, வான்வழித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 1971 டிச., 16ல் பாகிஸ்தானின் 90,000 ராணுவ வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். 13 நாள் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் உருவானது.

கார்கில் போர்



4கடந்த, 1999 ஏப்ரலில் லே யூனியன் பிரதேசத்தின் கார்கிலில் மீண்டும் பாதுகாப்புப் பணியை தொடரச் சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாக்., ராணுவம், பயங்கரவாதிகள் என 5,000 பேர், இந்திய பகுதிக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட 'ஆப்பரேஷன் பாதர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட அத்துமீறல் இது என்பதை இந்தியா உணர்ந்தது.


பாக்., சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 3ல் ராணுவ நடவடிக்கையை துவங்கியது. வான்வழித் தாக்குதல் வாயிலாக இந்திய ராணுவம், தன் நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது.


ஆதரவு தேடி அமெரிக்கா வுக்கு ஓடினார் அப்போதைய பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப். அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பாக்., பின்வாங்கியது. ஜூலை 26ல் இந்திய ராணுவம் கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 1.0



52016 செப்., 18ல் காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 19 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு தான் இதற்கு காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடி தரும் விதமாக செப்., 29ல் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0



62019 பிப்., 14ல், காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய ராணுவ வாகனங்கள் ரோந்து செல்லும்போது, பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடியாக பிப்., 26ல், பாக்., எல்லைக்குள் நுழைந்து பாலக்கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது.

பஹல்காம் பதிலடி



7ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் இந்திய சுற்றுலா பயணியர் மீது 2025 ஏப்., 22ல் பாக்., ஆதரவு பெற்ற நான்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


இதில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக நேற்று பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது.

Advertisement