கவுன்சிலரை அவமதித்த அறநிலையத்துறை மன்னிப்பு கேட்க எச்.ராஜா ஆவேசம்

மேற்கு மாம்பலம், சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் நகரில் வட மதுர கண்ணன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதலமடைந்திருந்த நிலையில், அதை இடித்து, புதிதாக கட்டும் பணியை ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.

கடந்த 6 ம் தேதி இரவு, அறநிலையத்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டடனர். அப்போது, அங்கு வந்த பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், 'இரவு நேரத்தில் கோவிலை இடிப்பது ஏன்' என்றும், 'கோவிலை இடிப்பதற்கு உரிய ஆவணம் இருக்கிறதா' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வடமதுர கண்ணன் கோவிலை நேற்று பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பார்வையிட்டார். பின், அவர் கூறியதாவது:

இரவு 11:00 மணிக்கு திருட்டுத்தனமாக கோவில் இடிக்கப்பட்டுள்ளது. இங்கே இருந்த விக்ரகம் எங்கே?

கோவிலில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்றால், முறையாக பாலாலயம் செய்து, விக்ரத்தை கோவில் வளாகத்திற்குள்ளேயே மாற்றி வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும். கவுன்சிலர் உமா ஆனந்தனை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாரதிராஜா ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், ஹிந்து அறநிலையத்துறை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement