வேகவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாற்றின் குறுக்கே பழையசீவரம் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், செய்யாற்றின் குறுக்கே வெங்கச்சேரி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.

சிலாம்பாக்கம் பகுதியில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டு வருகிறது. இவை, அருகில் உள்ள ஏரிகளுக்கும், விவசாய கிணறுகளுக்கும் நீர் ஆதாரத்தை அதிகபடுத்துவதோடு, நிலத்தடி நீரையும் செறிவூட்ட பயன்படுகிறது.

பாலாறு, செய்யாறு கரையோர பகுதியில் தண்ணீர் பிரச்னை இன்றி உள்ளது. ஆனால், வேகவதி ஆற்றின் குறுக்கே நீர் வளத்தை அதிகபடுத்த தடுப்பணை, அணைக்கட்டு போன்ற எந்த கட்டுமானங்களும் இன்றி உள்ளது.

வேகவதி ஆற்றை நம்பி காஞ்சிபுரம் நகரவாசிகள் உள்ளனர். காஞ்சிபுரம் நகரை கடந்து வேகவதி ஆறு செல்வதால், வேகவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அல்லது அணைக்கட்டு ஆகிய இரு கட்டுமானங்களில் ஒன்றாவது கட்ட வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேகவதி ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டு, நகரை ஒட்டி சிறிய அளவிலான அணைக்கட்டுகளை கட்டினால், காஞ்சிபுரம் நகருக்கான நிலத்தடி நீருக்கு பிரச்னை ஏற்படாது எனவும் தெரிவிக்கின்றனர்.

கீழம்பி அருகே தடுப்பணை ஒன்றை கட்ட ஏற்கனவே நீர்வளத்துறையினர் திட்டம் வைத்திருந்தனர். ஆனால், பாலாறு தடுப்பணைக்கே இன்னும் நிதி ஒதுக்காத நிலையில், வேகவதி ஆற்றில் தடுப்பணைக்கு அடுத்தகட்ட நடவடிக்கை இன்றி உள்ளது.

வேகவதி ஆற்றிலும் தடுப்பணை கட்ட தேவையான நடவடிக்கையை நீர்வள ஆதாரத்துறையினர் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement