குளத்தில் அழுகிய ஆகாயத்தாமரைகளால் துர்நாற்றம் சீரமைக்க பூதுார் கிராமவாசிகள் கோரிக்கை

சோழவரம்:சோழவரம் ஒன்றியம், பூதுார் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில், கால்நடைகள் மற்றும் கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வந்த கீரிப்பிள்ளையான்குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

குளம் முழுதும், ஆகாயத்தாமைகள் சூழ்ந்த நிலையில், தற்போது அவை அழுகி உள்ளன. இதனால் குளத்துநீர் துர்நாற்றமாக இருக்கிறது.

குளத்தில் தேங்கும் தண்ணீர் கால்நடைகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. அழுகிய ஆகாயத்தாமரைகளால் குளத்து நீர் துர்நாற்றம் வீசுவதால், கால்நடைகள் குடிப்பதில்லை. தற்போது அவை தண்ணீர் தேடி அலைகின்றன.

எட்டு ஆண்டுகளுக்கு முன், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், குளம் சீரமைக்கப்பட்டது. அதன்பின், குளத்தில் அவ்வப்போது தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.

சோழவரம் ஒன்றிய நிர்வாகம் குளத்தில் உள்ள அழுகிய ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றி, துாய்மைப்படுத்திட வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement